செவ்வாய், 29 ஜனவரி, 2013

MUTHURAMALINGA THEVAR [முத்துராமலிங்கத் தேவர்]

MUTHURAMALINGA THEVAR

முத்துராமலிங்கத் தேவர்

முத்துராமலிங்கத் தேவர் (அக்டோபர் 30, 1908அக்டோபர் 30, 1963) தென் தமிழகத்தில் பசும்பொன் எனும் சிற்றூரில் பிறந்தவர். சுதந்திரப் போராட்டத் தியாகியாக விளங்கியவர். நேதாஜி சுபாஷ் சந்திர போசின் தலைமையில் பரங்கியரை எதிர்த்த இந்திய தேசிய இராணுவத்திற்கு தமிழகத்திலிருந்து பெரும் படையை திரட்டி அனுப்பிய பெருமை இவரைச் சாரும். தலைசிறந்த பேச்சாளராகவும் ஆன்மீகவாதியாகவும் திகழ்ந்த இவரது பிறந்த நாள் தமிழக அரசு விழாவாக பசும்பொன்னில் வருடந்தோறும் கொண்டாடப்பட்டு வருகின்றது.
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் என்றும் அறியப்பட்ட இவர் அகில இந்திய பார்வார்ட் ப்ளாக் கட்சியின் தமிழகத் தலைவராக இருந்தார். மேலும் மூன்று முறை இந்திய பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.சிறையில் கிடந்த சிங்கம்
அன்று என் மனதில் பதிந்த அந்த உருவம், அவரைப்பற்றி நான் அறிந்துகொண்ட செய்திகள், அவர்மீது எனக்கு மதிப்பை ஏற்படுத்திற்று. இந்தத் தெற்குச்சீமையின் மாபெரும் தலைவராக, வங்கத்துச் சிங்கம் நேதாஜிக்கு நிகரான தலைவராக தெற்கே உலவிய தலைவர் தேவர். அவர் பிறந்தது, அக்டோபர் 30, 1938. வாழ்ந்த நாள்கள் 20,075. அதில் 4,000 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டுக் கிடந்தார். தன் வாழ்வில் ஐந்தில் ஒரு பகுதியை சிறையில் கழித்தவர் அந்தத் தென்னாட்டுச் சிங்கம்.
நாட்டின் விடுதலைக்காக, ஆங்கில ஏகாதிபத்யத்தின் பிடரி மயிரைப்பிடித்து உலுக்குகின்றவராக, அடக்குமுறைக்கு அஞ்சாத தீரராக, எந்தச் சிறையில் அவர் அடைக்கப்பட்டு இருந்தாரோ, அங்கே அவர் எப்படிப்பட்ட நெறிகளைக் கடைப்பிடித்தார் என்று நான் அறிந்து இருக்கிறேன், கேட்டு இருக்கிறேன். நான் சிறையில் இருந்தபோது, என் வீரச்சகோதரர்கள் பூமிநாதன், வீர.இளவரசன், செவந்தியப்பன், அழகு சுந்தரம், கணேசனோடு சேர்ந்து, எந்தச் சிறையில் தேவர் திருமகனார் இருந்தாரோ அதே வேலூர் சிறையில் இருக்கின்ற பேறு எங்களுக்குக் கிடைத்ததால், அந்தப் பிறந்த நாளையும் அவரது படத்தைக் கொண்டு வந்து வைத்து, சிறைக்கு உள்ளே நாங்கள் கொண்டாடினோம். அந்தத் தகுதியோடு இங்கே பேசுகிறேன்!
தெரிந்து கொள்ள வேண்டும்
அவருடைய வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்தையும் எண்ணிப் பார்த்தால், பிறந்த ஆறு திங்களில் அன்னையை இழந்தார். ஒரு இஸ்லாமியத் தாயின் அரவணைப்பில் வளர்ந்தார். ஜாதி எல்லைகளைக் கடந்த தலைவர் அவர். ஆகவேதான் தேவர் திருமகனாரைப் பற்றி மாசி வீதியில் பேசவேண்டும் என்பது, ஏதோ வழக்கமாக அல்ல. என் கடமைகளில் ஒன்றாக, எனக்குக் கிடைத்த பேறாகக் கருதி இங்கே நான் பேசிக் கொண்டு இருக்கிறேன். இந்த இளைஞர் சமுதாயம் அவரைப் பற்றித் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகப் பேசுகிறேன்.
அவருக்குப் பத்தொன்பது வயது ஆயிற்று. 1927 ஆம் ஆண்டு, சென்னையில் காங்கிரஸ் மாநாடு. அந்த மாநாட்டுக்குத் தலைமை ஏற்றவர் டாக்டர் அன்சாரி. தேவர் திருமகனார் அரசியலுக்கு உள்ளே அப்போது நுழையவில்லை. அவர் குடும்பம் பெரிய ஜமீன் குடும்பம். எண்ணற்ற கிராமங்கள் அவருடைய கட்டுப்பாட்டில் ஆளுகைக்கு உள்ளே இருந்தன. ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலபுலங்கள். ‘எனக்குப் பஞ்சுமெத்தை தெரியாது, பட்டுத் தலையணை தெரியாது, பாய்தான் தெரியும்’ என்று சொன்ன தேவர் திருமகன், ஒரு சீமான் வீட்டுப்பிள்ளை. செல்வச் செழிப்புள்ள குடும்பத்து வீட்டில் பிறந்த பிள்ளை. அப்படிப்பட்ட தேவர் திருமகனார், அவருடைய குடும்பத்தில் இருந்த பிணக்குகளால், சிவில் வழக்குகள் தந்தையாரோடு மனத்தாங்கல் ஏற்பட்டது.
சென்னையில் தேவர்
அப்படிப்பட்ட சூழலில், அந்த சிவில் வழக்குகளை நடத்துவதற்காகச் சென்னைக்குச் சென்றார். ‘அம்ஜத் பார்க்’ என்கிற பெயருள்ள மாளிகை. மயிலாப்பூரில், மூன்று ஏக்கர் சுற்றளவு உள்ள மாளிகை. அந்த மாளிகையின் சொந்தக்காரர் சீனிவாச அய்யங்கார். மிகப்பெரிய வழக்கறிஞர். அவரிடம் சென்றார் வாலிபராக இருந்த தேவர்.
‘ஐயா, இந்த வழக்குகளை நடத்த வேண்டும். அதற்காக வந்து இருக்கிறேன்’ என்றவுடன், பெரிய குடும்பத்துப் பிள்ளை அல்லவா? சீனிவாச அய்யங்கார் அவ்வளவு பெரிய மாளிகையில் அவரை வரவேற்று உபசரித்து, ‘நான்கு நாள்கள் காங்கிரஸ் மாநாடு இங்கே நடக்கிறது. அந்த வேலையில் இருக்கிறேன். நான்கு நாள் கழித்து, இந்த வழக்கு விசயங்களை, இந்த ஆவணங்களைப் பார்க்கிறேன்’ என்று சொல்கிறார்.
பிறகு சில நிமிடங்கள் கழித்து அவர் கேட்கிறார், ‘இந்த நான்கு நாள்களும் நீங்கள் இங்கேயே தங்க முடியுமா?’ என்று கேட்கிறார். எதற்காக ஐயா கேட்கிறீர்கள்? என்றார். அந்தக் காலகட்டத்தில் சென்னையில் பெரிய ஓட்டல்கள் கிடையாது. நட்சத்திர ஓட்டல்கள் கிடையாது. விருந்தினர் விடுதிகள் கிடையாது. தலைவர்களை முக்கியமான வீடுகளில்தான் தங்க வைப்பார்கள். நாட்டின் புகழ் வாய்ந்த தலைவர்கள் அவர் காந்தியாராகட்டும், நேருவாகட்டும், திலகராகட்டும் அந்தத் தலைவர்களை எல்லாம், வீடுகளில் தங்கவைப்பார்கள். அது வழக்கம்.
‘நான்கு நாட்கள் நான் சொல்கின்ற ஒரு சிறுபணியை, நீங்கள் செய்ய முடியுமா?’ என்று கேட்கிறார். தேவர் திருமகன் ஆங்கிலமும் நன்கு பேச வல்லவர், ‘சொல்லுங்கள் செய்கிறேன்’ என்கிறார்.
தேவர் வாழ்விலே திருப்பம்
‘ஒன்றுமில்லை; வட இந்தியாவில் இருந்து பெரிய தலைவர்கள் வந்து இருக்கிறார்கள். அவர்கள் வீடுகளில் தங்க வைக்கப்படுகிறார்கள். அப்படி ஒரு தலைவருடைய வீட்டில், அவரோடு இருந்து அவரை மாநாட்டுக்கு அழைத்து வரவும், திரும்ப அழைத்துச் செல்லவும், அவருடைய செளகரியங்கள் நன்றாக நடக்கிறதா என்பதை உடனிருந்து கண்காணித்து உதவிசெய்வதற்கும் உங்களால் இயலுமா?’ என்றார். ‘தாராளமாகச் செய்கிறேன், மகிழ்ச்சியாகச் செய்கிறேன்’ என்கிறார். தேவர் வாழ்விலே அதுதான் திருப்பம்.
இந்த விலாசத்தில் இருக்கின்ற வீட்டுக்குச் சென்று, அந்தத் தலைவரிடத்தில் இவரை அறிமுகப்படுத்தி வைத்து, ‘உங்களுக்கு உதவியாக இருப்பார் இந்த இளைஞர்’ என்று சொன்னார். அந்தத் தலைவர்தான் நேதாஜி. இப்படித்தான் உறவு மலர்ந்தது. சந்தர்ப்பங்கள் ஒரு மனிதரின் வாழ்க்கையில் எப்படிப்பட்ட திருப்பங்களை ஏற்படுத்துகின்றன பாருங்கள்!
நாட்டுக்கு அருட்கொடை அவர்கள் சந்திப்பு. இத்தென்னாட்டுக்கு அருட்கொடை அந்தச் சந்திப்பு.
வங்கத்துச் சிங்கம் நேதாஜி அவர்களுக்கு நான்கு நாட்களும் உறுதுணையாக தேவர் இருந்த அந்தச் சந்திப்புதான், வாழ்நாள் முழுமையும் பிரிக்க முடியாத பிணைப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. அப்படித்தான், அவர் பொது வாழ்வுக்கு வருகிறார்.
முதல் மேடை
1933 ஆம் ஆண்டு. விவேகானந்தர் முதலாவது ஆண்டுவிழா என்ற நிகழ்ச்சியில்தான் முதன்முதலாக மேடையில் முழங்குகிறார் தேவர் திருமகன். அந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர் பெயர் சேதுராமன் செட்டியார்.
இதை நான் குறிப்பிடக் காரணம், இதை மறக்காமல் இருந்து, பிறிதொரு கட்டத்தில் ஒரு தேர்தல் களத்துக்குப் போகிறபோது, ‘சகோதர சகோதரிகளே’ என்று சிகாகோவில் நடைபெற்ற அனைத்து உலக நாடுகளின் சமய மாநாட்டில் முழங்கி, உலக நாடுகளின் பார்வையைத் தன் பக்கம் திருப்பினாரே, பரஹம்சரின் தலைமை சீடர் விவேகானந்தர், அவரைப்பற்றிப் பேச தனக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த சேதுராமன் செட்டியாரை, ஒரு தேர்தல் களத்தில் தன் சமூகத்தைச் சேர்ந்த மறவர் குலத்தைச் சேர்ந்தவர் போட்டி இடவேண்டும் என்பதற்கான எல்லா வாய்ப்பும் இருந்தபோதும், அதைத் தவிர்த்துவிட்டு, சேதுராமன் செட்டியாரைத் தேர்தல் களத்தில் நிறுத்தி வெற்றி பெற வைத்த பெருமகன்தான் தேவர் திருமகன் என்பதை நான் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
களப்போர்
பசும்பொன் தேவர் திருமகனார், அப்போது இருந்த அடக்குமுறைச் சட்டங்களை எதிர்த்து அரசியல் களத்தில் போராடுகிறார். இங்கே குறிப்பிட்டார்களே, ஆங்கில ஆட்சியாளர்களால் மிகப்பெரிய அடக்கு முறைக்கு ஆளானது முக்குலத்தோர் சமுதாயம். விடுதலை வரலாற்றிலே பிரிட்டிக்ஷ் ஏகாதிபத்தியத்தின் அடக்குமுறைக்குப் பலியான சமுதாயம். ஒவ்வொரு விதமான அடக்குமுறை இருக்கும்.
ரேகைச் சட்டத்தின் கொடுமை
தென்னாப்பிரிக்காவில் நிற வேற்றுமை அடக்குமுறை, அமெரிக்க நாட்டிலே அண்மைக் காலம்வரை கருப்பர்களுக்கு எதிரான அடக்குமுறை. இந்த நாட்டிலே விதைக்கப்பட்ட வர்ணாசிரமத்தின் காரணமாக நிகழ்த்தப்படு கின்ற, நிகழ்த்தப்பட்ட அடக்குமுறை, அன்றைக்கு முக்குலேத்தோர் சமுதாயத்துக்கு விளைந்த அந்த அடக்குமுறைக்கு என்ன காரணம் என்று கேட்டால், 1897 ஆம் ஆண்டு, 1911 ஆம் ஆண்டு 1923 ஆம் ஆண்டு இந்த மூன்றுமுறையும் குற்றப்பரம்பரைச் சட்டம் திணிக்கப்பட்டது. ரேகைச்சட்டம்.
அந்தச் சட்டத்தின்படி, இவர்கள் எல்லாம் குற்றவாளிகள், இந்த இனத்தில் இந்தக் குடும்பங்களில் பிறந்தவர்கள், இவர்கள் எல்லோரும் குற்றவாளிகள், குற்றம் செய்யக்கூடிய பரம்பரையினர், குற்றப்பரம்பரையினர். ஆகவே, இவர்கள் தங்களது ரேகைகளைக் காவல் நிலையங்களில் போய்ப் பதிவுசெய்து கொள்ள வேண்டும். அதுமட்டும் அல்ல. இரவு 11 மணி முதல் விடியற்காலை 4 மணி வரை, காவல்நிலையத்தில்தான் அவர்கள் அடைக்கப்பட்டு இருக்க வேண்டும். அவர்களுக்கு நீதியின் கதவுகள் திறக்காது. இந்தக் கொடுமை இந்தியத் துணைக்கண்டத்தில் வேறு எங்காவது உண்டா?
அதனுடைய 10 ஏ பிரிவு மிகக்கொடுமையானது. அதன்படி, ‘நான் ரேகை கொடுக்க மாட்டேன்’ என்று சொன்னால், அதற்கு அபராதமும் போட்டு ஆறு மாதங்கள் சிறையில் தள்ளலாம். இந்தக் கொடிய சட்டத்தை எதிர்த்து, ஜார்ஜ் ஜோசப் என்பவர் முதலாவது தர்ம யுத்தத்தைத் தொடங்கி வைத்தார். அந்தப் போராட்டத்தைக் கையில் எடுத்து நடத்தியவர் பசும்பொன் தேவர் திருமகனார்.
அடக்குமுறைக்கு அஞ்சாதே
ரேகைச் சட்டத்தை எதிர்த்துப் போராடுகிறபோதுதான் அவர் சொன்னார்; கொடும் துன்பத்துக்கு ஆளாகி இருக்கின்ற இந்தச் சமூகத்து வீரவாலிபர்களைப் பார்த்துச் சொன்னார்; ‘அடக்குமுறைக்கு அஞ்சாது வாருங்கள், ரேகை புரட்டுவதற்கு ஒப்புக் கொள்ள மாட்டோம், ரேகை கொடுக்காதீர்கள்’ என்றார். அவர் சொல்லுக்குக் கட்டுப்பட்டுச் சீறி எழுந்தார்கள் தென்னாட்டில். துப்பாக்கிகளால் அவர்களை மிரட்டமுடியாது என்பதை சரித்திரம் அன்றைக்கே நிரூபித்துக் காட்டியது.
குற்றப் பரம்பரைச் சட்டத்தை எதிர்த்து தேவர் திருமகனாரின் ஆணைக்கு இணங்கக் களத்தில் குதித்த வாலிபர்கள் மீது பெருங்காநல்லூரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில்,சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் பதினொரு பேர். மீண்டும் துப்பாக்கிச் சூடு. மூன்றுபேர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். மொத்தம் பதினான்கு பேர் தங்கள் உயிர்களைத் தந்தார்கள்.
இப்படிப்பட்ட காலகட்டத்தில், சிவகாசியில், தேவர் திருமகனார்க்கும், காவல்துறை உயர் அதிகாரிக்கும் வாதம் நடக்கிறது. வெள்ளைக்கார அரசாங்கம். அவன் கேட்கிறான். ‘ரேகைச் சட்டத்தை எதிர்த்து நீங்கள் ஏன் போராடுகிறீர்கள்? உங்களுக்கு என்ன பிரச்சனை?’ என்கிறான்.
அஞ்ச மாட்டேன்
தேவர் அவர்கள் சொல்கிறார்கள்:‘பக்கத்து வீடு பற்றி எரிந்தால் பார்த்துக் கொண்டு இருக்க முடியுமா?’ உடனே அவன், ‘இதற்கு என்ன பொருள்?’ என்கிறான். பக்கத்து வீடு பற்றி எரியும்போது அணைக்காவிட்டால், அடுத்து தன்னுடைய வீடும் தானாக எரியும். இன்றைக்கு இந்த ரேகைச் சட்டம் அப்பாவிகள் மீது பாய்கிறது. நாளைக்கு என் மீதும் பாயாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? என்று கேட்கிறார்.
இந்த வாதம் நடக்கிறபோது, பெரிய காவல்துறை அதிகாரி வருகிறார். ‘எங்கள் ஏகாதிபத்தியம் உலகத்தில் பல நாடுகளில் பரவி இருக்கிறது. மிக சக்தி வாய்ந்தது. உங்களுக்குத் தெரியுமா?’ என ஆங்கிலத்தில் கேட்கிறான்.
தேவர் திருமகன் ஆங்கிலத்தில் பதில் சொல்கிறார். ‘தெரிவேன் நன்றாகத் தெரிவேன், மேலும் தெரிவேன். இதைவிட எத்தனையோ ஏகாதிபத்தியங்கள் இருந்த இடம் தெரியாமல் அழிந்து, புல் முளைத்த சரித்திரமும் நான் அறிவேன்’ என்கிறார்.
எங்கள் பேரரசுக்குக் கடல் போன்ற இராணுவ பலம் இருக்கிறது தெரியுமா? என்கிறான் வெள்ளைக்காரன். உடனே சொல்கிறார் தேவர் திருமகன்: ‘கடல் போன்ற படை இருக்கிறதா? மானத்தைப் பெரிதாகக் கருதுகிறவனுக்கு, சாவு பொருட்டு அல்ல. சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால் மட்டம் என்பதை நீ தெரிந்து கொள்’ என்கிறார். அவன் கேட்கிற ஒவ்வொரு வார்த்தைக்கும், அவனுடைய சொல்லைக் கொண்டே மடக்குகிறார்.
இப்படி அடக்குமுறைகளை எதிர்த்துப் போராடிய தேவர் திருமகனார், தென்னாட்டில் காங்கிரஸ் கட்சியைக் கட்டிக் காத்து வளர்த்தார். தியாகச்சுடர் காமராசர் அவர்களுக்கு அரண் அமைத்துக் கொடுத்தார். இதைத் தெரிந்து கொள்ள வேண்டும் தென்னாட்டு மக்கள். தியாக சீலர் பெருந்தலைவர் காமராசர் அவர்களை நான் மதிக்கிறேன். பதவிக்காலத்தில்கூட தனக்கென்று எதையும் சேர்த்துக் கொள்ளாது, தன் தாயைப்பற்றிக்கூட கவனிக்காது வாழ்ந்து மறைந்த உத்தமர்தான் காமராசர். அவரை நான் மதிக்கிறேன்.
காமராசருக்கு உதவி
காமராசர் அவர்களுக்கு அரசியல் அடித்தளம் அமைத்துக் கொடுத்தவர் நமது தென்னாட்டுச் சிங்கம் தேவர் திருமகனார் என்பதை இங்கே நான் பதிவுசெய்ய விரும்புகிறேன். ஒருகாலகட்டத்தில், விருதுநகரில் காமராசரைத் துன்புறுத்துவதற்கு, இழிபடுத்துவதற்குப் பலர் முனைந்தபோது, அதை உடைத்து எறிந்தவரும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகன்தான் என்பதை நான் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.
காமராசர் நகர்மன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டும். சொத்து வரி கட்டி இருக்க வேண்டும். ஆனால், அவருக்கு சொத்து இல்லை. காமராசர் வீட்டுக்குப் போகிறார். அவர் தாயாரிடத்தில் கேட்கிறார். இருக்கிற ஒரு சொத்தை வைத்து வரி செலுத்தலாமா? என்று கேட்கிறபொழுது, ‘இவன் வீட்டுக்கே உதவாமல் போய்விட்டான். ஒரு மகள் இருக்கிறாள். அவளையும் நான் பார்க்க வேண்டும். இதை எப்படி எழுதி வைக்க முடியும்? என்கிறார். ஒன்றும் சொல்லவில்லை. ‘அதுசரி உங்கள் விருப்பம்’ என்று சொல்லி விட்டு வந்து, ஒரு ஆட்டுக் குட்டியை விலைக்கு வாங்கி, அந்த வரியை காமராசர் பெயரில் செலுத்தி, தேர்தலில் நிற்க வைத்தவரும் பசும்பொன் தேவர் திருமகன் என்பதையும் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
இப்படிப்பட்ட காலகட்டத்தில்தான், இதே மதுரை மாநகரில், 1937 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் நாள், மதுரை இரயில்வே நிலையத்தில், காங்கிரஸ் தலைவர்கள் எல்லோரும் கூடினார்கள். என்.எம்.ஆர்.சுப்பராமன் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கூடினார்கள். அண்ணல் காந்தியார் இரயிலில் வாசற்படியில் நிற்கிறார். மக்கள் திரள்கிறார்கள்.
வைத்தியநாத அய்யரும் கலந்து கொண்டார். மகாத்மா காந்தி அவர்களிடம் பேசுகிறார். ‘ஆலயங்களுக்கு உள்ளே அரிஜனங்கள் நுழைய வேண்டும். அதுதான் என் கனவு. அதை நீங்கள் நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும்.’ என்கிறார்.
மதுரையில் காந்தியார்
‘இப்பொழுது நான் திருவனந்தபுரத்துக்குப் போய்க் கொண்டு இருக்கிறேன். திருவனந்தபுரம் மன்னர், அங்கே இருக்கிற கோயில்களை எல்லாம் திறந்து, அரிஜனங்கள் ஆலயங்களுக்கு உள்ளே செல்ல ஏற்பாடு செய்து இருக்கிறார். இங்கே புகழ்மிக்க மீனாட்சி அம்மன் கோயில் இருக்கிறது. இந்த மதுரையிலும் ஆலயத்துக்கு உள்ளே அரிஜனங்கள் செல்ல வேண்டும். அதற்குரிய கருத்து மக்களிடத்தில் உருவாக வேண்டும். அந்தப் பணியில் நீங்கள் ஈடுபட வேண்டும்’ என்று மதுரை இரயிலடியில் இந்தக் கருத்தைத்தான் காந்தி அடிகள் பேசிவிட்டு, மீண்டும் அதே இரயிலில் புறப்பட்டு திருவனந்தபுரம் சென்றார்.
கிட்டத்தட்ட ஐந்தாறு மாத காலம் அதற்கான ஆயத்த வேலையில் ஈடுபட்ட வைத்தியநாத அய்யர், ஜூலை திங்கள் 8 ஆம் நாள், ‘அங்கயற்கண்ணி ஆலயத்துக்கு அரிஜனங்களை அழைத்துச் செல்வது’ என்று அறிவித்தார். மீனாட்சி அம்மன் கோவிலுக்கு உள்ளே அரிஜனங்கள் நுழைவார்களானால் வெட்டுக்குத்து இரத்தக் களரி ஆகும். கையை வெட்டுவோம், காலை வெட்டுவோம், உள்ளே நுழைய விடமாட்டோம் என்று பலபேர் பல இடங்களில் அச்சுறுத்திக் கொண்டு இருந்தார்கள். ஒரே பரபரப்பும் பதட்டமுமாக, என்ன நடக்குமோ என்ற பீதியும் இந்த மதுரை மாநகரில் ஏற்பட்டு விட்டது.
அங்கயற்கண்ணி ஆலயம் இருக்கக்கூடிய நான்மாடக்கூடல், ஆலவாய் நகரில் நான் நின்று பேசுகிறேன். அனல்வாதம் புனல்வாதத்தைச் சந்தித்த திருஞானசம்பந்தரின் காலடிபட்ட இம்மாநகரில் இருந்து பேசுகிறேன். நரியைப் பரியாக்குவதும், பரியை நரியாக்குவதுமான சரித்திரத்துக்குச் சொந்தமான மாணிக்கவாசகர் உலவிய மதுரை மாநகரில் இருந்து நான் பேசுகிறேன். இந்தக் கோவிலுக்கு உள்ளே அரிஜனங்களை அழைத்துச் செல்ல வேண்டும் என்று வைத்தியநாத அய்யர் திட்டமிடுவதைத் தடுப்பதற்கு ரவுடிகள் தயாராகி விட்டார்கள் என்ற செய்தி வந்தபோது, பசும்பொன் தேவர் திருமகனார் ஒரு அறிக்கையை துண்டு அறிக்கையாக அச்சிட்டு மதுரையில் வெளியிட்டார்.
தேவரின் எச்சரிக்கை
அந்த அறிக்கையில் குறிப்பிட்டார்:
‘மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு உள்ளே வைத்திய நாத அய்யர் அரிஜனங்களை அழைத்துக் கொண்டு போவதற்கு ஏற்பாடு செய்து இருக்கிறார். ஆனால், அதேநேரத்தில் சனாதனிகள் ரவுடிகள் கூட்டத்தை ஏற்பாடு செய்து, கலவரம் விளைவிப்பதற்குத் திட்டமிட்டு இருப்பதாக நான் கேள்விப்படுகிறேன். வைத்தியநாத அய்யரோடு அரிஜனங்கள் உள்ளே நுழைவார்களானால், அவர்களைப் படுபயங்கர மாகத் தாக்கி, அங்கயற்கண்ணி ஆலயத்தை இரத்தக்களரியாகச் செய்வதற்குத் திட்டமிட்டு இருப்பதாக எனக்குத் தகவல்கள் கிடைத்து இருக்கின்றன. சனாதனிகள் ஏற்பாடு செய்து இருக்கிற ரவுடிகளை எச்சரிக்கிறேன். வைத்தியநாத அய்யர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு உள்ளே வருகிறபோது, அடியேனும் வருவேன். அவர்கள் திட்டமிட்டபடி கலவரம் செய்ய வருவார்களானால், அந்த ரவுடித்தனத்தைச் சந்திக்க வேண்டிய விதத்தில் நான் சந்திப்பேன்.
இது தேவர் திருமகனாரின் துண்டு அறிக்கை. இந்தச் செய்தி மக்கள் மத்தியில் உலவுவதற்கு பல பேர் ஏன் விரும்பவில்லை?
ஒடுக்கப்பட்டோர் உரிமை பெற்றனர்
தமிழகத்துக்குப் பெருமை சேர்க்கின்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு உள்ளே, ஒடுக்கப்பட்ட சமூகத்து மக்களோடு வைத்தியநாத அய்யர் நுழையும்போது எவன் தடுக்க வந்தாலும் நானும் உடன் வருவேன், அவற்றை நானே சந்திப்பேன் என்று தேவர் பிரகடனம் செய்ததால்தான், எட்டுப் பேர்களை அழைத்துக் கொண்டு, 8 ஆம் தேதி வாழ்நாள் எல்லாம் தூய்மையாகவும், நேர்மையாகவும் இருந்து நாணயமான நேர்மையான அரசியல் நடத்தி அமைச்சராக இருந்தபோதுகூட சல்லிக்காசு சேர்த்துக் கொள்ளாது இன்றைக்குச் சிலையாக நிற்கிறாரே காங்கிரசின் மதிப்பு வாய்ந்த தலைவர்களுள் ஒருவரான கக்கன்ஜி, அவரும் ஆறு பேரும் உள்ளே நுழைந்தார்கள்.
இதை எல்லாம் நான் குறிப்பிடக் காரணம், இப்படி அவருடைய நோக்கம், அவருடைய அணுகுமுறை குறுகிய எல்லைகளைக் கடந்தது.
நேதாஜி
1938 இல் திரிபுரியில் காங்கிரஸ். இரண்டாவது தடவையாக நேதாஜி காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பதவிக்குப் போட்டி இடுகிறார். நேதாஜியை நாடு விரும்புகிறது. காந்தி அடிகள் விரும்பவில்லை, படேல் விரும்பவில்லை. இன்னும் பலபேர் சேர்ந்து சூழ்ச்சி செய்தார்கள். அவர்கள் சதி செய்தார்கள். பண்டித நேரு அப்பக்கமா? இப்பக்கமா? என்று கடைசிவரை தீர்மானிக்க முடியாமல் தடுமாறிக் கொண்டு இருந்தார். நேதாஜியின் பக்கம்தான் அவரது உள்ளம் இருந்தது.
ஆனால், காந்தியாரின் எண்ணத்துக்கு விரோதமாகச் செல்கின்ற துணிச்சல் பலருக்கு இல்லை. மகாத்மா காந்தியின் வேட்பாளராக பட்டாபி சீதாராமையா போட்டி இடுகிறார். வாக்குப்பதிவு நடக்கிறது. அப்போது என்ன சொன்னார்கள்? காந்தி அடிகளின் தரப்பில் சொல்லப்பட்டது, தென்னாட்டில் இருப்பவர்கள், இன்றைய ஆந்திரம் உள்ளிட்ட திராவிட பூமியாக அன்றைக்குத் திகழ்ந்த சென்னை இராஜதானியில் இருப்பவர்கள், பட்டாபி சீதாராமையாவை விரும்புகிறார்கள் என்றபோது, அதேபகுதி பட்டாபி சீதாராமையாவுக்குப் பின்னால் இல்லை, அது நேதாஜிக்குப் பின்னாலேதான் இருக்கிறது என்பதை நிரூபிக்க, இங்கே இருந்து சென்ற தலைவர்கள் பசும்பொன் தேவர் திருமகனாரும், காமராசரும் ஒருசேர நேதாஜிக்கு ஓட்டுப் போட்டார்கள். இதெல்லாம் ஆவணம்!
ஆனால், உட்கட்சி ஜனநாயகம் அன்றைக்கே சிதைக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியில் ஜனநாயகத்தின் குரல்வளை நெறிக்கப்பட்டது. 105 டிகிரி காய்ச்சலில் நேதாஜி துடித்துக் கொண்டு இருந்தபோதும், ‘காரியக்கமிட்டி கூட்டத்தின் முடிவை நாங்கள் நிறைவேற்றுவோம், காந்தி சொல்வதுதான் காரியக் கமிட்டி. காங்கிரஸ் கட்சித் தலைவருக்கு அதிகாரம் இல்லை’ என்று ஜனநாயகத்தைச் சிதைத்தனர். அந்த காலகட்டத்தில் நடந்த சம்பவங்களை எல்லாம் விவரிப்பதற்கு நேரம் இல்லை.
நேதாஜி காய்ச்சலோடு மேடையில் வந்து இருந்தார். தானாக ராஜினாமா செய்தார். அதற்குப்பிறகுதான் ‘பார்வர்டு பிளாக்’ என்ற பெயரை, பத்திரிகைக்குச் சூட்டினார். கட்சிக்கும் சூட்டினார். ஆக, காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி ஜனநாயகம் சிதைக்கப்பட்டு, அவர் வெளியேற்றப்பட்டார். மேற்கு வங்கத்தில் கல்கத்தாவில் இருக்கிற வெள்ளைக்காரன் நீல் சிலையை அப்புறப்படுத்த வேண்டும் என்று போராட்டம் நடத்தினார். எப்படி நீங்கள் அந்தப் பேராராட்டத்துக்கு அறிவிப்பு கொடுக்கலாம்? என்று கட்சியில் இருந்து நடவடிக்கை எடுத்தார்கள். நேதாஜி எந்தத் தவறும் செய்யவில்லை. அந்தக் காலகட்டத்தில்தான் ‘பார்வர்டு பிளாக்’ கட்சி உதயமாயிற்று. வங்கத்துச் சிங்கத்தின் வரலாறு, தியாக வரலாறு. ஈடு இணையற்ற வரலாறு.
நான் இன்றைக்கு மதுரையில் சொல்கிறேன். தோழர்களே, வங்கத்துச் சிங்கம் நேதாஜியின் போராட்டத்துக்கு உரிய இடத்தை இந்த நாட்டுச் சரித்திரத்தில் தருவதற்கு பலர் மறுத்தாலும்கூட, அவருக்கு நிகராக எவரும் இந்த நாட்டில் போராடவில்லை.
அவருடைய படையில், 40,000 தமிழர்கள் இருந்தார்கள். வங்காளிகள் அல்ல - பஞ்சாபிகள் அல்ல - மராத்தியர்கள் அல்ல - குஜராத்திகள் அல்ல - ஒரியாக்காரர்கள் அல்ல - எவரும் இல்லை. நேதாஜியின் படையில் 40,000 தமிழர்கள் இருந்தார்கள்.
அதனால்தான், ‘நான் மீண்டும் பிறந்தால் ஒரு தமிழனாகப் பிறக்க வேண்டும்’ என்று நேதாஜி சொன்னார்.
அவருக்காகத் தமிழர்கள் உயிர்களைக் கொடுத்தார்கள். துப்பாக்கித் தோட்டாக்களை மார்பில் ஏந்தினார்கள். அந்தப் பட்டாளத்தின் அணிவகுப்புக்கு அடித்தளமாக இருந்தவர், பசும்பொன் தேவர் திருமகனார் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது.
சென்னையில் நேதாஜி
அப்படிப்பட்ட பசும்பொன் தேவர் திருமகனார், 1939 ஆம் ஆண்டு சென்னைக்கு நேதாஜியை அழைத்துக் கொண்டு வருகிறார். பரபரப்பான சூழல். காங்கிரசில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டார். பார்வர்டு பிளாக் கட்சி தோன்றிவிட்டது. சென்னையில் செப்டம்பர் 3 ஆம் தேதி பேசுகிறார்.
இந்து பத்திரிகை சிறப்பு பதிப்பு போட்டு கடற்கரைக் கூட்டத்தில் விநியோகம் செய்கிறது. உலகத்தைத் திடுக்கிடச் செய்கின்ற செய்தி வந்துவிட்டது. ஆம், ஹிட்லர் தன்னுடைய போரைத் தொடங்கிவிட்டார். ஆக்கிரமிப்பைத் தொடங்கிவிட்டார். செகோஸ்லோவியாவுக்கு உள்ளே நாஜிப்படைகள் நுழைந்துவிட்டன. இந்தச் செய்தியை சிறப்புப் பதிப்பில் பிரசுரித்த பத்திரிகை வெளிவருகிறது. துண்டுச் சீட்டும் மேடையில் போகிறது நேதாஜிக்கு. அவர் இந்திய அரசியலைப் பேசிக்கொண்டு இருக்கிறார்.துண்டுச்சீட்டு வந்தவுடன், உலக அரசியல் பக்கம் திருப்பினார் நேதாஜி.
நான் எல்லோர் உரைகளையும் படித்து இருக்கிறேன். பண்டித ஜவஹர்லால் நேரு எழுதிய உலக சரித்திரக் கடிதங்களைப் போன்ற ஒரு நூல், இதுவரை இந்தியாவில் இன்னொருவர் எழுதவில்லை. அற்புதமான நூல். உரைகள் என்று பார்த்தால், பல்கலைக் கழகங்களில், நகராட்சி மன்றங்களில், கல்லூரி வளாகங்களில், மாநாட்டு மேடைகளில் நேதாஜியின் பேச்சு எந்தப் பொருளை எடுத்தாலும் சரி, மெய்சிலிர்க்க வைக்கும். நாடி நரம்புகளில் ஓடுகின்ற குருதியைச் சூடேற்றும். சிந்திக்க வைக்கும் அற்புதமான பேச்சாளர்.
அப்படிப்பட்ட பேச்சாளர், பன்னாட்டு அரசியல் பற்றிப் பேசுகிறார். அங்கு இருந்தே சுற்றுப் பயணத்தை இரத்து செய்துவிட்டுப் போகலாமா? என்று நினைக்கிறார். தேவர் திருமகன் சொல்கிறார், மதுரையைச் சுற்றிய சுற்றுப் பயணம் ஏற்பாடு செய்து இருக்கிறேன். நீங்கள் கட்டாயம் வர வேண்டும்‘ என்கிறார். நீண்டநேரம் ஆலோசனை செய்து, மதுரையில் மட்டும் பேசுவது என்று முடிவு எடுக்கிறார்கள். இதே மதுரை மாநகரில் 6 ஆம் தேதி நேதாஜியும், தேவர் திருமனாரும் பேசினார்கள். கடைசியாக நேதாஜி பேசியது மதுரையில்தான்!
இதுதான் வேளை
இங்கே பேசிவிட்டு நேதாஜி, தேவர் திருமகனை அழைத்துக் கொண்டு நாகபுரிக்குப் போகிறார். அங்கே காங்கிரஸ் கட்சியின் கூட்டம். அந்த உறுப்பினர்களை மட்டும் அல்ல, ஜெயப்பிரகாக்ஷ் நாராயணன் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி நடத்தினார் அல்லவா, அவர் போன்ற தலைவர்களையும், பல தலைவர்களை அழைத்து ஒரு கூட்டம், மாராட்டிய மாநிலத்தில் ஏற்பாடு செய்யப்படுகிறது. அந்தக்கூட்டத்துக்கு பசும்பொன் தேவர் திருமகனாரையும் அழைத்துக் கொண்டு போகிறார் நேதாஜி. அக்கூட்டத்தில் காந்திஜி உட்கார்ந்து இருக்கிறார், பண்டித ஜவஹர்லால் நேரு இருக்கிறார். நேரு நேதாஜியின் மீது மிகுந்த அன்பாக இருந்தவர்.
கூட்டம் நடக்கிறது. நேரு சொல்கிறார்:‘உலகத்தில் பல நாடுகள் பிரிட்டனை ஆதரிக்கின்றன. எனவே, ஹிட்லரை எதிர்த்து நாமும் இங்கிலாந்தை ஆதரிப்போம்’ என்கிறார். உடனே நேதாஜி கேட்கிறார், ‘பல நாடுகள் என்று சொல்கிறீர்களே, எந்த நாடுகள்? ஆஸ்திரேலியாவா? கனடாவா? இல்லை காலனி நாடுகளாக இருக்கக்கூடிய இலங்கை, பர்மா போன்ற நாடுகளா? எந்த நாடுகள்?’ என்று கேட்கிறார். பதில் சொல்லவில்லை நேரு.
அதற்குப்பிறகு இங்கிலாந்து நாட்டு ஆதரவு நிலை எடுக்கிறபோது, காந்தியாரைப் பார்த்து நேதாஜி சொல்கிறார், ‘கீதையைப் படிக்கிறீர்கள் அர்ஜூனனுக்குக் கண்ணன் சாரத்தியம் செய்தார், கெளரவர்களை அழிப்பதற்காக. அதைப்போல நாட்டை விடுவிக்கின்ற போரில் நீங்கள் கண்ணனாக இருந்து வழி நடத்துங்கள். இது பொருத்தமான வேளை. நம்மை அடிமைகளாக வைத்து இருக்கின்ற பிரிட்டிக்ஷ்காரனை விரட்டுவதற்குச் சரியான நேரம்’ என்று சொல்கிறார்.
வாக்குவாதம் வருகிறது. அதனால், கையில் வைத்து இருக்கின்ற பேனாவை எடுத்து மேஜையில் குத்துகிறார் பண்டித நேரு. அதுமட்டும் அல்ல, ‘ You you you ’ என்று நேதாஜியைப் பார்த்து நேரு சொல்கிறார். அவருக்கு முன்கோபம் அதிகம் வரும்.
நேதாஜி கோபப்படவில்லை. காந்தியாரைப் பார்த்துச் சொல்கிறார். காலமெல்லாம் நீங்கள் அகிம்சையைப் போதித்தீர்களே, யாரை முன்னிறுத்தி நீங்கள் அகிம்சையைப் போதித்தீர்களோ அவர் எப்படி நடந்து கொள்கிறார் என்று பாருங்கள். அழைத்ததால் வந்தேன். எப்படிப்பட்ட மரியாதை கொடுக்கப்பட்டது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள் என்று சொல்லி வெளியேறினார். அந்தக் கூட்டத்தில் பார்வையாளராக பசும்பொன் தேவர் கலந்து கொண்டார்.
அதன்பிறகு நேதாஜி சிறையில் அடைக்கப்பட்டார். அவர் உண்ணாநோன்பு இருந்து உயிரை முடித்துக் கொள்ளத் தீர்மானித்தார். வேறு வழி இல்லாமல் விடுதலை செய்தார்கள். அவர் வீட்டிலேயே தங்கி இருக்க வேண்டும் என்று வீட்டுக் காவலில் வைக்க உத்தரவிட்டார்கள். கொல்கத்தாவில் அவருடைய வீட்டு மாடியிலேயே தங்கி இருக்கிறார். அடியேன் அந்த வீட்டுக்குச் செல்கிற வாய்ப்பு கிடைத்தது. நேதாஜியின் அண்ணன் மகன் சிசிர் குமார் போஸ் அவர்கள், ஜனவரி 23 ஆம் தேதி நேதாஜி பிறந்த நாள் விழா கூட்டத்தில் பேசுவதற்கு என்னை அழைத்துச் சென்றார்.
அவர் தங்கி இருந்த அறை, படுத்து இருந்த படுக்கை எல்லாம் அப்படியே இருக்கிறது. அந்த இடத்தில் இருந்து ஒரு நள்ளிரவு நேரத்தில் சிசிர்குமார் போஸ் காரை ஓட்ட, அங்கிருந்து புறப்பட்டு, ஆப்கானிஸ்தான் காபூல் வழியாக, ரக்ஷ்யா சென்று, மாஸ்கோ வழியாக பெர்லின் போய்ச் சேர்ந்தார் நேதாஜி. இது சரித்திரம்.
அப்படிப்பட்ட நேதாஜி அவர்களோடு தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் பசும்பொன் தேவர் திருமகனார் அவர்கள் ஆவார்கள். 1962 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12 ஆம் தேதி, இத்தென்னாட்டு மக்கள் தைப்பொங்கல் கொண்டாடிக் கொண்டு இருந்தபோது, இந்த மதுரை மாநகரில் தமுக்கம் மைதானத்தில் பசும்பொன் தேவர் திருமகனார் பேசிய கடைசி கூட்டம். அந்தக் கூட்டத்தில் ராஜாஜியும் கலந்து கொண்டார்.
டி.வி.எஸ். விருந்தினர் விடுதியில் இருவரும் சந்திக்கிறார்கள். அங்கிருந்து கூட்ட மேடைக்கு சேர்ந்தே வருகிறார்கள். அந்தக் கூட்டத்தில் ஐந்து இலட்சம் பேர் கலந்துகொண்டதாக அன்றைய செய்தித்தாள்கள் தெரிவிக்கின்றன. வரலாறு காணாத கூட்டம். ஒரு நீண்ட இடைவெளிக்குப்பிறகு மக்கள் பசும்பொன் தேவர் திருமகனாரைப் பார்க்கிறார்கள். ராஜாஜி அமர்ந்து இருக்கிறார். கூட்டத்தில் இருப்பவர்கள் தேவர் திருமகனைப் பார்த்து கைகளைக் காட்டிக்காட்டி, ‘அய்யோ அய்யோ’ என்று வேதனைப்படுகிறார்கள். பலர் அழுகிறார்கள். ‘இப்படி மெலிந்து விட்டாரே, அய்யோ இப்படி ஆகிவிட்டதே’ என்று கூட்டத்தில் இருப்பவர்கள் கண்ணீர் வடிக்கிறார்கள்.
இரண்டரை மணிநேரம் பேசினாலும்கூட, சிம்மம் போல் நின்று பேசுகின்றவர் தேவர் திருமகன். பேசும்போது, துண்டுக்குறிப்புகளையும் பார்க்க மாட்டார். சோடா அருந்த மாட்டார். தண்ணீர் அருந்த மாட்டார். எத்தனை மணிநேரம் பேசினாலும், இடையில் ஒரு வினாடி கூட வேறுபக்கம் கவனத்தைத் திருப்ப மாட்டார். ‘அர்ஜூனன் கணையும், அம்பின் நுனியும், பறவையின் கழுத்தும் ஒரே நேர்கோட்டில் இருந்தது’ என்று மகாபாரதம் சொல்கிறதே, அதைப்போல எது இலக்கோ, அந்த இலக்கையே குறியாக வைத்துப் பேசுவார்.
ஆனால், அன்றைக்குத்தான் முதன் முதலாக நாற்காலியில் உட்கார்ந்து கொண்டே பேசினார். அவருடைய தோற்றத்தில் ஏற்பட்ட நலிவைப் பார்த்து மக்கள் அழுதார்கள்.
கடுகு அளவும் இல்லை
அதற்கு முன்னர் நான் ஒன்றைத் தெரிவிக்க வேண்டும். ஏனெனில், சரித்திரத்தில் சில செய்திகள், இல்லாத ஒன்றைக் கறை ஏற்படுத்திவிடக் கூடாது என்ற கவலையின் காரணமாக நான் சொல்கிறேன்.
நடக்கக் கூடாதது நடந்துவிட்டது. தென்னாட்டில் முதுகுளத்தூர் வட்டாரத்தில் நடக்கக் கூடாத கலவரம் நடந்து விட்டது. இரத்தம் கரைபுரண்டு ஆறாக ஓடியது. உயிர்கள் பலியாகின. குய்யோ முறையோ என்று இருதரப்பிலும் அழுகையும் கண்ணீருமாக இருந்தது. நான் சொல்கிறேன் சகோதரர்களே, தேவர் திருமகனார் உள்ளத்தில் எந்தப் பகை உணர்வும், யாருக்கும் தீங்கு செய்யவேண்டிய எண்ணமும் கடுகு அளவும் கிடையாது என்பதை நான் இந்த மாசிவீதியில் சொல்ல விரும்புகிறேன்.
அப்பொழுது சொன்னார்: ‘ஒடுக்கப்பட்ட சமூகத்து மக்களை - என் அரிஜன சகோதரர்களை யாராவது தாக்கி, அவர்களுக்குத் தீங்கு செய்வீர்களானால் அவர்களது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துவீர்களானால், என் இருதயத்தைப் பிளந்து இரத்தத்தைக் கொட்டச் செய்கிறீர்கள்’ என்று அறிக்கை விட்டார்.
அவரைப் பொறுத்தமட்டில் அவருடைய ஆயிரம் ஏக்கர் நிலபுலன்களை அள்ளித்தருகிறபோது, அனைத்து சமூக மக்களுக்கும் தலித் சமூகத்துச் சகோதரர்களுக்கும் சேர்த்தே அனைவரும் அவற்றை பயன்படுத்திக் கொள்ளட்டும் என்ற நோக்கம்தான் அவருக்கு இருந்தது.
நீதிமன்றத்தில் தேவர்
நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். புதுக்கோட்டை நீதிமன்றம். அந்த நீதிமன்ற நிகழ்ச்சியைப்பற்றி அப்பொழுது அரசாங்க வழக்கறிஞராக இருந்த எத்திராஜ் சொல்கிறார். சென்னையில் எத்திராஜ் கல்லூரி, அவர் பெயரில்தான் இருக்கிறது. புகழ்பெற்ற வழக்கறிஞர் எத்திராஜ். அவருக்கு உதவி செய்தவர் பின்னாளில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த கிருக்ஷ்ணசாமி ரெட்டியார். அவரும் அரசுத் தரப்பு வக்கீல்தான். தேவர் திருமகனுக்கு வாதாடியவர் வி.ராசகோபாலச்சாரியார் என்ற புகழ் பெற்ற வக்கீல்.
புதுக்கோட்டை நீதிமன்றத்தில் வழக்கு. குற்றவாளிக் கூண்டில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நிறுத்தப்பட்டார். அவரைப் பார்த்ததும், எத்திராஜ் உள்ளத்தில் ஏற்பட்ட உணர்ச்சியால், அவர் நீதிபதியைப் பார்த்துச் சொன்னார். ‘இவர் மக்கள் தலைவர். இலட்சக்கணக்கான மக்கள் நேசிக்கிற தலைவர். ஒரு நாடாளுமன்ற உறுப்பினர். அவருக்கு நாற்காலி போட்டுத்தர வேண்டும். அந்த நாற்காலியில் அவரை உட்கார வைக்க வேண்டும்’ என்கிறார்.
இப்பொழுது இருக்கக்கூடிய சட்டத்தின் அடிப்படையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கொடுத்து இருக்கின்ற ஒரு உத்தரவின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்டவர்களை உட்கார வைக்க வேண்டும் என்று ஒரு உத்தரவு இருக்கிறது. அது அப்பொழுது கிடையாது.
ஆனால், அரசுத் தரப்பு வக்கீல் சொல்கிறார், ‘இவர் மாபெரும் தலைவர் இவருக்கு நீங்கள் நாற்காலி கொடுக்க வேண்டும்’ என்று சொல்கிறார். சுற்றும்முற்றும் பார்க்கிறார்கள். நாற்காலி இல்லை. கிருக்ஷ்ணசாமி ரெட்டியார் சொல்கிறார், இது ஆனந்த விகடன் பத்திரிகையில் வந்து இருக்கிறது. ‘என்னுடைய நாற்காலியை அந்தப் பெருமகனுக்குத் தாருங்கள்’ என்று அரசு வக்கீல் சொல்கிறார். நீதிபதி அனந்தசயனம் அய்யங்கார். பின்னாளிலே தலைமை நீதிபதியாக உயர்நீதிமன்றத்துக்கு வந்தவர்.
உடனே உத்தரவு இடுகிறார். ‘நாற்காலி போடுங்கள்’ என்கிறார். நாற்காலியைக் கொண்டுவந்து போடுகிறார்கள். வழக்கத்தை மீறி கரவொலி எழுகிறது. பொதுவாக நீதிமன்றத்தில் கைதட்டக்கூடாது. வெளியே இருந்து வந்த மக்கள் எல்லாம் கரவொலி எழுப்புகிறார்கள்.
கிருக்ஷ்ணசாமி ரெட்டியார் குறிப்பிடுகிறார். ‘பகல் உணவுக்காக இருதரப்பு வழக்கறிஞர்களும் வெளியே சென்றுவிடுவார்கள். எல்லோரும் போய் விடுவார்கள். ஆனால்,தேவர் திருமகன் அந்த நாற்காலியை விட்டு அசைய மாட்டார். காலையில் இருந்து மாலை வரை ஒருசொட்டுத் தண்ணீர் குடிக்க மாட்டார் நீதிமன்றத்தில். யாரிடமும் பேச மாட்டார். இடைவேளை நேரத்தில் கூட யாரிடமும் பேசமாட்டார். அமைதியாக அமர்ந்தே இருப்பார். ’ என்று சொல்கிறார்.
வள்ளலாரும் தேவரும்
இந்தக் காட்சியைப் பார்த்தவுடன் நினைவுக்கு வருவது, அருட்பெருஞ் ஜோதி தனிப்பெருங்கருணை வடலூர் வள்ளலார்தான். அவர் மீது ஆறுமுக நாவலர் வழக்குத் தொடுத்து, நீதிமன்றத்துக்கு உள்ளே வடலூர் வள்ளலார் வருகிறபோது, குற்றம் சாட்டிய ஆறுமுக நாவலர் உள்பட, நீதிபதியும் எழுந்து நின்றதாக இந்த நாட்டின் கடந்த கால நிகழ்வுகள் சொல்லுகின்றன.
வடலூர் வள்ளலாரைப் போலவே, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனாருக்கும் நீதிமன்றத்திலே அப்படிப்பட்ட கெளரவம் கொடுக்கப்பட்டது. அவர் விடுவிக்கப்பட்டார். ஆனாலும், அவர் உள்ளம் வாடியது. மனம் உடைந்தார். வேதனையைச் சுமந்தார்.
அதற்குப்பிறகுதான், கிட்டத்தட்ட நான் முன்னே குறிப்பிட்டதைப்போல, ஒவ்வொரு முறையும் அவர் அருப்புக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதிக்கு நின்றாலும் சரி, திருவில்லிபுத்தூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு நின்றாலும் சரி, 1952, 1957, மீண்டும் 1962 அருப்புக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதி 1952, 1957 இலும் அவர் முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியிலும் சேர்ந்தே போட்டி இட்டார். ஓட்டுக் கேட்கப் போகாமல் வெற்றி பெற்ற ஒரு தலைவன் உண்டென்று சொன்னால் அது பசும்பொன் தேவர் திருமகனார்தான். அதைப்போல தொகுதிக்குச் செல்லாமல் வெற்றி பெற்றவர், கேரளாவில் மஞ்சேரி தொகுதியில் கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத். ஓட்டுக் கேட்கச் செல்லாமல் நோய்ப்படுக்கையில் இருந்துகொண்டே கோடிக்கணக்கில் வாக்குகளை வாரிக் குவித்தவர் புரட்சித் தலைவர்.
பசும்பொன் தேவர் திருமகனார் அவர்கள் நாடாளுமன்றத்தில் அற்புதமான உரைகளை ஆற்றி இருக்கிறார்.
1959 ஆம் ஆண்டுக்குப்பிறகு, மூன்று ஆண்டுகள் கழித்துப் பேசுகிறார். 1962 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி அவர் பேசுகிறபோது சொல்கிறார். ‘1959 ஆம் ஆண்டில் கடைசியாக உங்களை நான் சந்தித்தேன். மகாஜனங்களே, மனித தெய்வங்களாக நான் மதிக்கின்ற ஒருமித்த சக்தியான உங்கள் முன்னால் இன்றைக்கு இருக்கிறேன். மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் உங்களிடத்தில் பேசினேன். அன்றைய நாளைப்போலவே இன்றைக்கும் இலட்சம் பேர் வந்து இருக்கிறீர்கள் என்று சொல்லிவிட்டு, அப்போது அவர் தெரிவிக்கின்ற செய்திகள், இன்றைக்கு மதுரை மக்கள் யோசிக்க வேண்டிய செய்திகள்.
காலத்தை வென்ற வரிகள்
சில கருத்துகள் எந்தக் காலத்துக்கும் பொருத்தமாக இருக்கும். வள்ளுவன் கருத்தைப்போல, எந்தக் காலத்துக்கும் பொருத்தமாக இருக்கும். அதுபோல, தேவர் திருமகன் சொன்ன வார்த்தைகள், இன்றைக்கும் எல்லோராலும் உச்சரிக்கப்படுகின்ற சொற்கள்.
‘வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்.
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்’,
‘பெண்ணுக்கு உயிர் கற்பு’, ‘மனிதனுக்கு உயிர் மானம்’

என்று முழங்கினார்.
ஆள் தூக்கிச் சட்டத்தை அடியோடு அகற்றுவதற்குத்
தோள்தட்டி நின்றாரடி கிளியே
துணிவுள்ள தேவர் சிங்கம்

இது நாட்டுப்புறப் பாடல்.
அப்படி தன்னுடைய வாழ்வில், அடக்குமுறைகளை எதிர்த்து நாட்டுக்காகப் போராடிய தலைவர், தனக்கென்று எதையுமே நாடிக்கொள்ளாத தேடிக் கொள்ளாத, விளம்பரப்படுத்திக்கொள்ளாத தலைவர் அவர்.
இன்றைக்குத் தேவர் திருமகன் உயிரோடு இருந்தால் எதைச் சொல்வாரோ அதைச் சொல்கிறேன். அவருடைய கடைசி உரையில், இதைத்தான் குறிப்பிடுகிறார்.
எனக்கு எதிரிகள் இல்லை
‘நான் என் சக்திக்கு மீறி காங்கிரஸ் கட்சிக்கு உழைத்தேன். என் சக்தியைக் கடந்தும் நான் காங்கிரஸ் கட்சியை வளர்க்கப் பாடுபட்டேன். ஆனால், அதே காங்கிரஸ் கட்சி, என் மீது கொலைக்குற்றம் சாட்டிற்று. அதை ஸ்திரப்படுத்திக் கொள்வதற்காக முறையற்ற செயல்கள் பலவற்றில் அது ஈடுபட்டது. நான் சிந்திப்பது, நான் பேசுவது, நான் எழுதுவது, நான் செயல்படுவது எல்லாமே தேசத்துக்காகத்தான். நான் எனக்கென்று எதையும் தேடுவது இல்லை என்று திட்ட வட்டமாக முடிவெடுத்தவன் என்பது அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட நான் எவரையும் எதிரியாகக் கருதவில்லை. எனக்கென்று எதையும் தேடாத நான், யாருக்கு எப்படி எதிரியாக முடியும்?
இது தேவர் வாக்கு.
யாரையும் நான் எதிரியாகக் கருதவில்லை. யார் மீதும் ஆத்திரம் இல்லை என்று சொல்கிறார். என்னை எதிரியாகவோ, நண்பனாகவோ கருதுகிறவர்கள், அவரவர்கள் விருப்பப்படி கருதிக் கொள்ளட்டும் என்று சொல்லிவிட்டு, ‘நான் பதவியை விரும்பாதவன் என்பது உங்களுக்குத் தெரியும். ராஜாஜி பதவியைப் பார்த்துச் சலித்தவர் என்பதும் உங்களுக்குத் தெரியும். எனக்கு ஏதோ பதவி வேண்டும் என்பதற்காக அல்ல. எது உண்மையோ, மக்களுக்கு எது நியாயமோ அதை பச்சைபச்சையாகச் சொல்கிற நான், ஆளும் கூட்டத்துக்கு அனுசரணையாக இருக்க முடியாது என்பது எனக்குத் தெரியும்.
இன்றைக்கும் பொருந்தும்
ஆனால், ஆளுகிற அரசு அதிகாரத்தை அவர்களே தொடர்ந்து ஆளவேண்டும் என்பதற்காக அக்கிரமம் செய்கிறார்கள். அக்கிரமமான சூழ்நிலையில் மக்கள் சிக்கி இருக்கிறார்கள் என்றார். திடீரென்று யாராவது ஒருவர் இந்த நேரத்தில் மதுரைக்கு வந்து, தற்செயலாக பேருந்து நிலையத்தில் இருந்து, ரயிலடியில் இருந்து வந்து, இந்தப் பேச்சை இப்பொழுது கேட்டால், தேவர் திருமகன் அன்றைக்குச் சொன்னது என்று நினைக்க மாட்டார்கள். ஒரு அக்கிரமமான சூழலில் மக்கள் சிக்கி இருக்கிறார்கள் என்று இன்றைக்குத் தமிழகத்தில், அதிலும் குறிப்பாக மதுரையில் இருக்கிற நிலைமையைத்தான் வைகோ பேசுகிறான் என்று நினைப்பார்கள். நான் வேறு ஒன்றும் சொல்லவில்லை.
தேவர் அவர்களுக்கே உரிய நாகரிகமான மொழியில், முரடர்கள் என்று சொல்கிறார். குண்டர்கள், காலிப்பயல்கள் என்று சொல்லாமல், ரவுடிகள் என்று சொல்லாமல், நாட்டு மக்களின் உரிமைகளை வேட்டையாடுகின்ற காட்டுமிராண்டிகளின் கூட்டம் என்று சொல்லாமல், முரடர்கள் என்று சொன்னார். வைகோ சொல்வான், ஆனால் அன்றைக்கு இருந்த நிலைமைக்கு அது தேவை இல்லை, இன்றைக்கு அது தேவை இருப்பதால் நான் அதைச்சொல்வேன். ஆனால், அவர் சொல்கிறார் ‘முரடர்களைப் பயன்படுத்து கிறார்கள். பலாத்காரத்தைப் பயன்படுத்துகிறது அதிகாரத்தின் மூலம் பயமுறுத்துகிறது’ என்று சொல்கிறார்.
அன்று சொன்னது இன்றும் நடக்கிறது
தேவர் திருமகன் சொன்னது எல்லா காலத்துக்கும் பொருந்தும் அல்லவா?
தேவர் திருமகன் அன்றைக்குச் சொல்கிறார். இன்று நடப்பது என்ன? ஆளும்கூட்டம் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொண்டு, தொடர்ந்து ஆட்சி நடத்துவதற்காக, எங்கே அவர்களுக்குப் பலம் இல்லையோ அங்கே முரட்டுத் தனமான ஆட்களை, முரடர்களை ஏவி கலவரம் செய்கிறார்கள்.
தேவர் திருமகன் அவர்கள், ‘ஜனநாயகத்தில் ஆளுங்கட்சியும்,எதிர்க்கட்சியும் இரண்டு கண்களில் ஒரு கண். இரண்டு கண்களும் சரியாக இருந்தால்தான் பயணம் சரியாக இருக்கும். இல்லாவிட்டால் இடறும் மூளியாகும் நிலைமை ஏற்படும். இந்த அக்கிரமச் சக்திகளை உடனே தடுத்து நிறுத்தாவிட்டால், பிறகு எப்பொழுதுமே தடுக்க முடியாது. இந்த நாசசக்திகளே சாஸ்வதமாகி விடும். மதுரைக்கு அப்படிப்பட்ட அபாயம் நேர்ந்துவிடக்கூடாது இப்பொழுது. நாசசக்திகளே சாஸ்வதமாகி விடக்கூடாது’ என்றார்.
ஆட்சியும், அதிகாரமும் இருக்கிறது என்பதால், இன்றைக்கு மதுரையில் அக்கிரமம் செய்கிறார்களே? மேற்குத் தொகுதி, மத்தியத் தொகுதி வாக்காளப் பெருமக்களே, நான் மக்கள் ஆட்சியை மதிப்பவன்தான். ஆனால் தேவர் திருமகன் சொன்னார். இலஞ்சம் கொடுத்து, பணம் கொடுத்து அதிகாரத்தைத் தக்கவைக்க நினைப்பவர்களைப்பற்றி அந்தக் கூட்டத்தில் சொன்னார். ‘மகாஜனங்களே, முளைப்பாரிக் கொட்டுக்கு 2 ரூபாய் செலவழித்துப் போய்ப் பார்க்கிறீர்கள். ஜல்லிக்கட்டைப் பார்க்க 4 ரூபாய் கொடுத்து பார்த்து ரசித்துவிட்டு வருகிறீர்கள். சினிமாவுக்கு 5 ரூபாய் கொடுத்து பார்த்து அனுபவித்து வருகிறீர்கள்.
ஆனால், ஓட்டுப் போடுவதற்கு நமக்கு எவனாவது காசு, பணம் தருவானா? என்று நீங்கள் எதிர்பார்க்கலாமா? என்று கேட்டார்.
காவல்துறை எங்கே?
இன்றைக்குப் பல இலட்சம் பேர் வந்தார்களே, நாங்கள் ஏன் தாமதமாக வந்தோம்? மூன்று மணிநேரம் தாமதமாகத்தான் பசும்பொன்னுக்கு உள்ளே செல்ல முடிந்தது என்றால், மக்கள் கூட்டம் பல இலட்சம்.
வேதனையோடு நான் குற்றம்சாட்ட விரும்புகிறேன். முதல் அமைச்சர் அவர்களே, உங்களிடம் காவல்துறை இருக்கிறது. இன்றைக்குப் பத்து இலட்சம் பேர் கூடுகின்ற இடத்தில் ஏன் காவல்துறை பாதுகாப்பு இல்லை? எத்தனை பேர் வந்தார்கள்? எங்கே இருந்தார்கள்? வந்த ஒன்றிரண்டு காவல் துறையினரும் அவரவர்கள் வேலையைப் பார்த்துவிட்டுச் சென்றார்கள். அப்படியானால் எதற்கு காவல்துறை?
நேற்றைக்கு ஒரு சம்பவம் நடந்து இருக்கிறது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கிருக்ஷ்ணசாமி வேல் கம்பால் தாக்கப்பட்டு உள்ளார். கொஞ்சம் மயிரிழை அளவு வேல்கம்பு மேலே பாய்ந்து இருந்தால், இதயத்தில் பாய்ந்து உயிரே போய் இருக்கும்.
ஈரோடு கவுந்தம்பாடி நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு, விடியற்காலை 4 மணிக்கு மதுரைக்கு வந்தேன். நேராக நான் அப்பல்லோ மருத்துவமனைக்கு பதட்டத்துடன் சென்றேன். விபரீதம் ஏதும் நடந்துவிடக்கூடாது என்ற கவலையில் சென்றேன். அரசியல் எல்லைகள் என்பது வேறு, மனிதாபிமானம் என்பது வேறு. மருத்துவர்கள் சொன்னார்கள், ஒன்றும் பயப்பட வேண்டியது இல்லை, உயிருக்கு ஆபத்து இல்லை’ என்றார்கள்.
இலட்சக்கணக்கான மக்கள் கூடப்போகிற விழா நிகழ்ச்சியை ஒட்டி, எந்த நேரமும் பதட்டமான நிலைமை ஏற்படக்கூடும் என்ற கடந்தகால சரித்திரத்தை மனதில் கருதி, இந்தத் தலைவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று நீங்கள் ஏன் உத்தரவு போடவில்லை? உங்களது உளவுத்துறை என்ன செய்து கொண்டு இருக்கிறது? தமிழ்நாடு காவல்துறையின் உளவுப்பிரிவினுடைய தவறு, தோல்வி. கடமை தவறிய தோல்வி. இதற்குத்தானே வைத்து இருக்கிறீர்கள்? வேறு எதற்கு வைத்து இருக்கிறீர்கள்? உங்கள் சொந்தக் குடும்பங்கள் விவாகாரங்களைக் கவனிக்க மட்டும் வைத்து இருக்கிறீர்களா? இன்றைக்குப் பல்லாயிரக்கணக்கான போலிஸ் கொண்டுவந்து நிறுத்தி இருக்க வேண்டாமா? போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி இருக்க வேண்டாமா? ஒரு சின்ன அசம்பாவிதம் நடந்துவிட்டால் எவ்வளவு பெரிய கேடு நடந்துவிடும்?
கடமையைச் செய்யவில்லை
புரட்சித் தலைவியின் ஆட்சியில்தானே தென்னாட்டிலே எந்தக் கலவரமும் இல்லாமல் அமைதிப் பூங்காவாக இருந்தது. யாரும் மறுக்க முடியாது. ஆனால், உங்கள் ஆட்சியில்தான் இரத்தக் களரியும், பிணங்கள் விழுந்தவண்ணமாக இருந்தது கடந்தமுறை? அந்த மாதிரி நிலைமை வந்து விடவே கூடாது. ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடந்துவிட்டால், தீப்பொறி வதந்திகளாகி, அதற்கு கண், காது, மூக்கு வைத்து, கையும் காலும் முளைத்து, விஷமிகள், சமூக விரோதிகள், இருக்கிற சமூக ஒற்றுமையைக் குலைக்க, கலவரம் நடத்த இதையே பயன்படுத்தும் ஒரு சூழ்நிலை வந்து விடக்கூடாதே என்ற கவலையில் செயல்பட்டு இருக்க வேண்டாமா?
தமிழ்நாடு அரசு கடமையைச் செய்யவில்லை.நல்லவேளை, எந்தச் சம்பவமும் நடக்கவில்லை. தேவர் திருமகனின் புகழ் நிலைக்கட்டும்.
இளைஞர்களால் பெருமை
பெருமையோடு சொல்கிறேன் தோழர்களே, இன்றைக்கு வந்தவர்களில் 80 சதவிகிதம் இளைஞர்கள். நான் இந்தத் தமிழ் மண்ணை எண்ணிப் பெருமைப்படுகிறேன். ஒரு சின்ன அசம்பாவிதம் கூடக் கிடையாது. காவல்துறை கடமையாற்ற விட்டாலும், அவரவர்கள் பொறுப்போடு இருந்து, இந்நிகழ்ச்சியில் எந்தச் சின்ன சலசலப்புக்கும் இடம் இல்லாமல், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் - திராவிட முன்னேற்றக் கழகம் - மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் - பார்வர்டு பிளாக் கட்சி - காங்கிரஸ் - பொதுவுடைமை இயக்கம் - சமூக அமைப்புகள் - முக்குலத்தோர் அமைப்புகள் பல்வேறு அமைப்புகள் என இத்தனை இலட்சம்பேரும் வந்து எந்த சின்ன பிரச்சனைகூட இல்லை என்பதால் நான் பெருமைப்படுகிறேன்.
இன்றைக்குப் பசும்பொன்னுக்கு வந்துவிட்டுப்போன வாலிபர்கள், இளைஞர்களை எண்ணி நான் பெருமைப்படுகிறேன். அவ்வளவு கட்டுப்பாடோடு நடந்து, முதல்வர் கடமை தவறினாலும், இந்த மண்ணின் மக்கள், இந்த மண்ணின் மைந்தர்கள் கடமையைச் செய்து இருக்கிறார்கள்.
உத்தமத் தலைவனின் புகழ் வாழ்க!
‘கட்டுண்டோம் பொறுத்து இருப்போம். காலம் மாறும்’ என்றான் பாரதி. அதைப்போல, காலம் மாறும், காரியங்கள் தானாக நடக்கும். இது தேவர் திருமகன் அருள்வாக்கு. தேவர் திருமகனாரின் நூறாவது ஆண்டு இது தொடக்கவிழா. வாழ்நாள் எல்லாம் நாட்டுக்காகவே வாழ்ந்த உத்தமத் தலைவனின் புகழ் வளரட்டும்!
தேவர் பெருமகனாரே, பசும்பொன் தங்கமே, தென்னாட்டுச் சிங்கமே, எளியவனான எனக்கு, உள்ளத்துக்கு வலிமையும் நியாயத்துக்குப் போராடுகிற வலுவையும் என் உடலுக்கும் தோள்களுக்கும் அருள்வீராக!
நன்றி, வணக்கம்!
(வைகோ இவ்வாறு உரை ஆற்றினார்.)
(தேவர் ஜெயந்தி விழா,
தெற்குமாசி வீதி, மேலமாசி வீதி சந்திப்பு, மதுரை
30.10.2007)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக